அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைப் போல அவன் மனது முழுதும் அவள் நினைவு, இன்று எப்படியாவது அவளைப் பார்த்து விட வேண்டுமென காலையிலிருந்து உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மறந்து தவம் கிடந்தான் அவன், அவனைப்பற்றி ஒரே வரியில் சொல்ல முடியாது, அவனைப் புரிந்து கொண்டவர்கள் அவனையும் தவிர்த்து அவன் வீட்டு நாய் மட்டுமே! கூதிர் காலத்தில் குளிப்பான், கோடையில் குளிப்பதை மறப்பான், பகலில் நட்சத்திரங்களை எண்ணுவான், இரவினில் சூரியனைத் தேடுவான், சினிமாவில் ஆக்ஷன் காட்சிகளை ரசித்துப் பார்ப்பான், மிஷ்கின் படத்தில் டிரிபூட் தேடுவான், கமல் படத்தில் ஆபாசம் எதிர்ப்பான், மொத்தத்தில் தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பான்.
நாவலில் செண்டிமெண்ட் காட்சிகள் வந்தால் அழுவான், பின்நவீனத்துவத்திலிருந்து கட்டற்ற களஞ்சியமான விக்கீபீடியா வரை கரைத்துக் குடித்தவன், எப்போவதாவது குடிக்க மாட்டான், குடித்துவிட்டு தத்துவமோ கவிதையோ சொல்லமாட்டான், கள்ளையும் சாராயத்தையும் கலந்து குடித்து கலெக்டரைப் பார்க்க வேண்டுமென்பான், குடிக்கும் வரை தமிழனாய் இருந்துவிட்டு குடித்தபின் ஃபிரெஞ்ச்சோ, இலத்தீனோ சரளமாய் பேசுவான், குடித்த பின் இலக்கியம் பேசமாட்டான், குடிக்காமல் பேசவே மாட்டான்.
எதைப் பற்றியும் கவலைப் படமாட்டான், ஆனால் சில நேரம் ஓரமாய் ஊறும் எறும்பைக் கூட காப்பாற்றி அதன் வீட்டில் விடவேண்டுமென்பான்.,மொத்தத்தில் அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் புரியாத புதிர், அவனுடைய இலக்கிய நண்பர்களுக்கு அவன் ஊறுகாய் அவர்களின் போதைக்கு, இப்படியாய் நாளொரு புத்தகமும் பொழுதொரு குடியுமாய் போன அவனது வாழ்க்கையில் ஒரு புதினமாய் வந்தால் அவள். இவன் படிக்கும் நூலகத்தில் அவள் நூலகர், மின்னல் சிரிப்பு, கன்னக் கதுப்பு என அவளை பார்த்ததும் மயங்கினான், அவனிடம் இது வரை இல்லாத மனிதக் காதல் சுரப்பிகள் சுரக்கத் தொடங்கின.
அவள் வருவது தூரத்தில் தெரிந்ததால் அவன் எழுந்து தலையை சரி செய்தான். அவள் அவனை நெருங்கி அழகாய் சிரித்து அவனிடம் ஏன் "ரைட்டர் நாகா" கவிதையை காப்பியடிச்சே என்றாள்..
பின்குறிப்பு:
கொஞ்சநாள் முன்னாடி டெர்ரர் கும்மியில் வெளியான எனது கட்டுரை, சில மாற்றங்களுடன்..
படங்கள் உதவி: கூகிள் இமேஜஸ்